Tuesday, December 16, 2008

நகரம்

இன்றைய இந்திய நகரங்கள் குறிப்பாக சென்னையின் அவல நிலையை இதைவிட அழுத்தமாகப் பதிவு செய்வது மகா கஷ்டம்...






நன்றி: ஆர்.கே.லட்சுமண்

Thursday, December 4, 2008

‘ஜனங்ககிட்ட அடிச்சது போதும்... தேர்தல் வருது!’

ரெண்டு மாசம் முடிஞ்ச வரைக்கும் அடிச்சாச்சு... இனி நல்லவங்களா மாறிவிட வேண்டியதுதான் என மத்திய அரசு முடிவு செய்துவிட்டது போலும்...

அட ஆமாங்க... பெட்ரோல் டீஸல் விலைக் குறைப்பை அதிகாரப்பூர்வமா அடுத்த வாரம் அறிவிக்க முடிவு செஞ்சிருக்காங்களாம்...

அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10, டீசல் ரூ.3 மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.20ம் குறைக்கப்படும் என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் நேற்று ‘கோடி” காட்டியுள்ளது!

கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக பேரலுக்கு 147 டாலராக இருந்தது. அதைக் காரணம் காட்டி, ஒரு முறை இருமுறை அல்ல 5 முறை பெட்ரோல் – டீஸல் விலை உயர்த்தப்பட்டது.

இந் நிலையில், சர்வதேச பொருளாதார நெருக்கடி ஆரம்பமானது. இந்த நெருக்கடியால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை மளமளவென சரியத் தொடங்கியது. எனவே, கச்சா எண்ணெய் விலையும் சரிந்தது.

கடந்த இரு மாதங்களாகவே, கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியில் இருந்தது. ஆனாலும் இந்திய பெட்ரோலியத் துறை விலைக் குறைப்பு பற்றி மவுனம் சாதித்தது. இந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 45 டாலர் ஆகிவிட்டது. அதாவது நான்கில் ஒரு பங்காக குறைந்து பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது கச்சா எண்ணெய் விலை. 1 லிட்டர் கச்சா எண்ணெய்யின் இன்றைய மார்க்கெட் மதிப்பு ரூ.13 மட்டும்தான்!

இன்றைய தேதிக்கு அரசு நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பெறும் லாபம் எவ்வளவு தெரியுமா... பெட்ரோலியத் துறை கொடுத்துள்ள தகவல்களின் படி ரூ.22 ரூபாய் (சுத்திகரிப்புச் செலவு, மத்திய அரசின் வரிகள், போக்குவரத்துச் செலவு, நிர்வாகச் செலவு, மாநில வரிகள் எல்லாம் கழித்த பிறகு!)

டீஸலில் இதைவிட சற்று லாபம் குறைவாக இருக்கும் அவ்வளவுதான்.
இதில் கொடுமை என்னவென்றால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு குறைத்தாலும், இதில் சம்பந்தமே இல்லாமல் கணிசமான வரி வருமானம் பெறும் மாநில அரசுகள் வரியைக் குறைக்கும் எண்ணத்திலேயே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை ஏறும்போதும் அந்தந்த மாநில அரசுகள் உள்ளூர் வரி விகிதத்தையும் உயர்த்திக் கொண்டே போகின்றன.

நேற்றுதான் ஒருவழியாக பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை குறைக்கப்படும் என்று அரை மனதோடு அறிவித்துள்ளார். அது கூட அடுத்த வாரம்தானாம்.

சிலர் இப்படி வாதிடக் கூடும்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வாங்கும்போது 3 மாத கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே 3 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

அது சரிதான்... சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்வதாக செய்தி வெளியான அடுத்த இரண்டு மணிநேரங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துகிறார்களே... அது எப்படி? அதற்கும் 3 மாத காண்ட்ராக்ட் காலம் முடியும் வரை காத்திருந்து நிலைமைகளை கணித்து உயர்த்தலாமே!

6 மணிக்கு விலை உயர்வு என ஊடகங்களில் அறிவிப்பு வரும். இரவு எட்டு மணிக்கே பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து ஆட்ர்டர்கள் பறக்கும். நள்ளிரவுக்குள் விலை உயர்வு அமலுக்கு வந்துவிடும். இந்த வேகம் விலைக் குறைப்பில் இல்லையே... இவர்கள் மக்கள் நல அரசுகள் என சொல்லிக் கொள்வதில் அர்த்தமிருக்கிறதா?

பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து வருவதால், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதைச் சாக்காகக் கொண்டு அரசு மௌனம் சாதிக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் முடிந்த வரை லாபம் பார்த்து வருகின்றன.

குறிப்பு: இந்தப் பணம் ஆட்சியாளர்கள் வீட்டுக்கா போகப்போகிறது? என்று கேட்பவர்களுக்கு... அரசுத் துறை பெட்ரோலிய நிறுவனங்கள் அடிக்கும் லாபம் அரசியல்வியாதிகள், மற்றும் அதிகாரிகளின் ஊதாரிச் செலவுகளுக்குதான் அதிகம் பயன்படுகிறது என்பது ஆடிட்டர் அண்டு கண்ட்ரோலர் ஜெனரலின் அறிக்கை வைத்துள்ள குட்டு!

-எஸ்.ஷங்கர்

இதற்குப் பெயர் மனிதாபிமானம்!

துவும் தட்ஸ்தமிழ் செய்திதான். நமது இதயம் தொட்ட ஒரு செய்தி. கூடுதல் அலங்காரங்களின்றி அப்படியே தருகிறோம்...

இந்தியர் இதயம் தொட்ட லண்டன்வாசிகள்!

லண்டன்: மனிதாபிமானம் என்று வந்துவிட்டால் மதங்களும் நாடுகளின் எல்லைகளும் குறுக்கே நிற்பதில்லை (அதாவது மனிதாபிமானமுள்ள நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும்!) என்பதற்கு இதோ இன்னுமோர் உதாரணம்.

மும்பையில் சில தினங்களுக்கு முன் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி மக்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு லண்டன்வாசிகள் திரண்டு வந்து இன்று அஞ்சலி செலுத்தினர்.

லண்டனின் வர்த்தக மையமான கேனரி டவர் பகுதியில் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளை ஏற்றி தங்கள் இதயப் பூர்வ அஞ்சலியைத் தெரிவித்தனர்.

லண்டன் மாநகரின் மையப்பகுதியான இங்கு எனக்குத் தெரிந்து இந்த இரு ஆண்டுகளில் இத்தனை உணர்ச்சிப்பூர்வமான, நெகிழ வைக்கும் காட்சியை நான் கண்டதில்லை. நூற்றுக்கணக்கான மெழுகு வர்த்திகளைக் கைகளில் ஏந்தியபடி அமைதி (PEACE) என்ற எழுத்து வடிவத்தில் அந்த வெள்ளைக்காரர்கள் நின்ற காட்சி என் இதயத்தைத் தொட்டது. தீவிரவாதத்தால் காயம்பட்ட இந்திய இதயங்களுக்கு ஒரு ஒத்தடமாக எனக்குப் பட்டது இந்தச் செயல்.

-அண்ணாமலை நடராஜன்

ஒரு இந்தியனின் இன்றைய மன நிலை!

சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கிலக் கட்டுரையின் மேம்பட்ட தமிழ் வடிவம்தான் இந்தக் கட்டுரை என்றாலும், படிக்கும் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விதத்தில் ஒவ்வொரு வரிகளும் அமைந்திருப்பதை உணரலாம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தரமான எழுத்தாக இதைப் பார்த்தேன்.

கட்டுரை வெளியான தளம் தட்ஸ்தமிழ். அதன் ஆசிரியர் ஏ.கே.கான் பாராட்டுக்குரியவர்.

இனி செய்தி!

இவர்களுக்கு தேவையா என்எஸ்ஜி பாதுகாப்பு?

சென்னை: நாட்டில் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக நாடு தினமும் பல நூறு கோடிகளை செலவழித்துக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான அரசியல்வாதிகள் வெறும் பந்தாவுக்காகவே தங்களைச் சுற்றி என்எஸ்ஜி கமாண்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெட்டி பந்தா அரசியல்வாதிகளில் முக்கியமானவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா. இவர் முதல்வராக இருந்தபோது இவரது காருக்கு முன்னும் பின்னும் 100 கார்களாகவது போக வேண்டும். என்எஸ்ஜி கமாண்டோக்கள், ஜாமர்கள் பொருத்திய வாகனங்கள், போலீஸ் ஜீப்புகள், ஆம்புலன்ஸ், கரை வேட்டிகளி்ன் கார்கள் என குறைந்தபட்சம் 50, 60 கார்களாவது போக வேண்டும். இதைப் பார்த்து மக்கள் வாயைப் பிளக்க வேண்டும். இவ்வளவு பெரிய தலைவரா என்று மக்கள் நினைக்க வேண்டும்.

இவரது வாகனம் வருவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பே சாலைகள் எல்லாம் சீல் செய்யப்பட்டுவிடும். ஆட்சியை விட்டு போன பின்னர் தான் இவரது கார் வரிசை கொஞ்சம் குறைந்தது. ஆனாலும் இவருக்கு இன்னும் இசட் பிளஸ் என்எஸ்ஜி பாதுகாப்பு உள்ளது.

ஜெயலலிதாவைவிட ஒரு படி மேலே போய்விட்டவர் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி. இவருக்கு அரசியல் எதிரிகள் தவிர வேறு எந்த ஆபத்தும் இருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. இந்த அரசியல் எதிரிகளை எதிர்கொள்ள 4 ஜீப் போலீசாரே போதும். ஆனால், பந்தாவுக்கு அது போதாதே.

இதனால் மாயாவதி தனக்கு என்எஸ்ஜி கமாண்டோ பாதுகாப்பை வலுக்கட்டாயமாகக் கேட்டு வாங்கிக் கொண்டுவிட்டார். இவரது 24 மணி நேர பாதுகாப்புக்கு 24 கமாண்டோக்கள் 3 ஷிப்ட்களில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தவிர 350 ஆயுதம் தாங்கிய போலீசாரும் 24 மணி நேரம் இவரது பாதுகாப்புக்காக டெடிகேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களாவது பரவாயில்லை. அமர் சி்ங் என்று ஒரு அரசியல்-கார்பரேட் புரோக்கர் இருக்கிறார். இப்போது, மத்திய அரசு ஆட்சியில் நீடிக்க இவரும் முலாயம் சிங்கின் ஆதரவுமே காரணம். மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சி எம்பிக்களின் ஆதரவை அறிவித்த மறு நிமிடமே தனக்கும் என்எஸ்ஜி கமாண்டோ பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார். இவருக்கும் 24 பேர் .. 8 மணி நேர ஷிப்டில் பாதுகாப்பு தந்து கொண்டிருக்கின்றனர்.

அமர் சிங் தனக்கு மட்டும் இந்த பாதுகாப்பை வாங்கிக் கொண்டால் போதுமா.. தனது தலைவர் முலாயமுக்கும் இந்தப் பாதுகாப்பை பெற்றுத் தந்துள்ளார்.

இந்தப் பட்டியலில் தேவெ கெளடாக்கள், சுப்பிரமணியம் சுவாமிகள் போன்ற அரசியல் ஜோக்கர்களும் அடக்கம். இவர்கள் எல்லாம் இசட் கேட்டகிரி என்ற பட்டியலின் கொண்டு வரப்பட்டு என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ளனர்.

இப்படியாக 250 பேர் விவிஐபிக்கள் என்ற பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டு என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ளனர். இதற்காக அரசு செலவிடம் பணம் ரூ. 158 கோடி.

தீவிரவாதிகளுக்கே தெரியாத ஆட்கள்....:

இந்தப் பட்டியலில் உள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சரத் யாதவ், முரளி மனோகர் ஜோஷி ஆகிய பெயர்களையாவது நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சஜ்ஜன் குமார், ஆர்எல் பாட்டியா, பிஎல் ஜோஷி, பிரிஜ்பூஷன் சரன், பிரமோத் திவாரி... இந்தப் பெயர்கள் நமக்கு மட்டுமல்ல தீவிரவாதிகளுக்கே தெரியாத ஆட்கள்.

அதே போல மத்திய அமைச்சர் என்ற ஒரே காரணத்துக்காக கமாண்டோ பாதுக்காப்பில் உள்ளவர் இ.அகமது. இவரை கேரளாவைத் தாண்டினால் யாருக்கும் தெரியாது.

இன்னொரு கொடுமை.. என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ள சஜ்ஜன் குமார் மீது ஒரு கொலை கேசும் உள்ளது.

இதைத் தவிர பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 14 பேர் இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு என்எஸ்ஜி உச்சபட்ச பாதுகாப்பு அளி்த்து வருகிறது. இதற்கு செலவாகும் தொகை ரூ. 180 கோடி.

நம் நாட்டில் 1 லட்சம் பேருக்கு 122 போலீசார் என்ற கணக்கில் தான் காவலர்கள் உள்ளனர். நாட்டில் மொத்தமுள்ள போலீசாரில் உளவுப் பிரிவில் உள்ளவர்கள் 1 சதவீதத்துக்கும் குறைவு. ஆனால், அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை 33 சதவீதம்.

அதாவது 3ல் 1 போலீஸ்காரருக்கு வேலையே அரசியல்வாதிகளின் பாதுகாப்பு தான்.

மத்திய உளவுப் பிரிவி்ன் தகவலின்படி இப்போது என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ள 30 சதவீதம் பேருக்கு அந்த பாதுகாப்பே தேவையில்லை. 50 சதவீதம் பேருக்கு லத்தி ஏந்திய சில போலீசாரே போதும். மிச்சமிருக்கும் 20 சதவீதம் பேருக்குத் தான் உண்மையிலேயே இந்த பாதுகாப்பு தேவை.

இன்னொரு விஷயமும் உண்டு. 1984ம் ஆண்டில் இந்த என்எஸ்ஜி உருவாக்கப்பட்டதன் நோக்கம் அரசியல் தலைவர்களை பாதுகாப்பது அல்ல. விமானக் கடத்தலைத் தடுப்பது, தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்துவது. இது தான் இந்தப் படை உருவாக்கப்பட்டதன் உண்மைக் காரணம்.

இந்தப் படையில் Special Action Group (SAG), Special Rangers Group (SRG) என இரு பிரிவுகள் உள்ளன. ராணுவத்தின் மிகச் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து உருவாக்கப்படுவது SAG. எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீ்ஸ் படை, இந்தோ-திபெத்தியன் பார்டர் போலீஸ், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, மாநில போலீசில் இருந்து சிறந்த வீரர்களைக் கொண்டு உருவாக்கப்படுவது SRG.

மிகக் கடினமான பயிற்சிகள், வெறும் கையால் ஆட்களைக் காலி செய்யும் திறமை, காடு, பனி, பாலைவனம், கடல், மலை எந்த இடத்திலும் பல நாட்கள் சோறு தண்ணி இல்லாவிட்டாலும் தாக்குப் பிடித்து தாக்குதல் நடத்தும் திறமை மிக்கவர்கள் இந்த வீரர்கள்.

விவிஐபிக்கள் என்ற பெயரில் வலம் வரும் அரசியல்வாதிகளை இசட் பிளஸ், இசட், ஒய், எக்ஸ் என பிரித்து பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர் இந்தப் படையினர்.

54 எம்பிக்களை கையில் வைத்துள்ள பிரகாஷ் காரத், ஏபி பர்தான் ஆகியோரும் அரசியல் தலைவர்கள் தான். மம்தா பானர்ஜியும் அரசியல் தலைவர் தான். 14 வருடம் முதல்வராக இருந்த ஜோதி பாசுவும் அரசியல் தலைவர் தான். ஆனால், இவர்கள் எல்லாம் ஒரு போலீஸைக் கூட உடன் வைத்துக் கொள்வதி்ல்லை. இவர்கள் மக்களுடன் கலந்துவிட்ட உண்மையான அரசியல் தலைவர்கள். இவர்களைப் போல மேலும் பல நல்ல அரசியல்வாதிகளும் உள்ளனர்.

ஆனால், தங்களைச் சுற்றி கமாண்டோ நின்றால் தான் படிப்பறிவில்லாத மக்கள் மனதி்ல் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்த முடியும், தான் ஒரு பெரிய தலைவராகத் தெரிவோம் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படையை தேவையே இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர் ஊழல், லஞ்சம், சுரண்டலுக்குப் பேர் போன பல அரசியல்வாதிகள்.

Sunday, November 23, 2008

தொடரட்டும் இந்த களவாணித்தனம்!

அரசாங்கம் என்பது என்ன? அப்படி ஒரு அமைப்பு நமக்குத் தேவையா?

மக்கள் குழுவை முறைப்படுத்த, அவர்களின் தேவைகளைக் கவனிக்க, மக்களால் உருவாக்கப்படுகிற, அங்கீகரிக்கப்படுகிற அமைப்புதான் அரசாங்கம்.

தனித்தனி மனிதர்களின் தான்தோன்றித்தனங்கள் சமூகச் சிதைவை ஏற்படுத்தும் தருணங்களில் இப்படியொரு அமைப்பின் இருத்தல் அவசியமாகிறது.

இவற்றையெல்லாம்விட முக்கியமானது இந்த அரசாங்கம் எப்படிப்பட்ட தன்மையதாக இருந்தாலும், நேர்மையாக இருப்பது முக்கியம்.

மக்களின் வெறுப்புக்குரியவனாக தன்னை ஆக்கிக் கொள்ளும் மன்னனுக்கு கடைசி புகலிடம் தூக்கு மேடைதான்!

நேர்மையில்லாத அரசுகள் தூக்கியெறியப்பட வேண்டியவையே!

-அரசியல் இலக்கணம் வகுத்த நிக்கோலோ மாக்கியவல்லி (1469-1527) இப்படிக் கூறுகிறார்!

இன்றைய ஐக்கிய முற்போக்கு (?!) கூட்டணி அரசின் நேர்மையைப் பார்க்கிற பொழுது, மாக்கியவல்லியின் கடைசி வாக்கியம் மனதுக்குள் நிழலாடுகிறது.

எத்தனையோ விஷயங்களில் இந்திய அரசுகளின் நேர்மை சந்தேகத்துக்கிடமின்றி பொய்யாக்கப்பட்டுள்ளது!

பொதுவாக ஒரு குற்றவாளிதான் சட்டத்தின் ஓட்டைகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்குவான்.

ஆனால் இந்தியாவின் மத்திய மாநில அரசுகள் இப்போது ஒரு குற்றவாளியின் வேலையைத்தான் முழுநேரமாகச் செய்துகொண்டிருக்கின்றன. அதிகபட்ச நேர்மையின்மைக்கு ஒரு உதாரணமாகவே இந்த அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

பொத்தாம் பொதுவாக இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
இதோ ஒரு உதாரணம்...

பெட்ரோல் டீஸல் விலைக் குறைப்பில் அரசுகள் காட்டி வரும் அதீத தயக்கம்.
இதைவிட அயோக்கியத்தனம் கிடையாது என்னும் அளவுக்கு, ஒரு சாதாரண வியாபாரியைவிட மோசமான நேர்மைக் குறைவுடன் அரசுகளும், அரசு சார் நிறுவனங்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை விஷயத்தில்.

சர்வதேச எண்ணெய் உற்பத்தி நாடுகள் அல்லது அவற்றின் பிரதான எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோலிய சந்தையை மையப்படுத்தி தாங்கள் நடத்தி வந்த ஊக வாணிபம் படுத்துவிட்டதால் வேறு வழியின்றி விலைச் சரிவை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

“கச்சா எண்ணெயின் விலை 48 டாலர்கள்தான் வாங்க... வாங்க’ எனக் கூவிக்கூவி விற்கிறார்கள் பெரும்பாலான நாடுகள். இன்னும் சில நாடுகளோ, அடுத்து எப்போது விலை ஏறும் என்ற எதிர்பார்ப்பில் கச்சா எண்ணெய்யை இருப்பில் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இன்றைய விலை நிலையில் இந்திய அரசு நியாயமாக பெட்ரோல் விற்றால் ஒரு லிட்டர் ரூ. 25க்கு மேல் ஒரு நயா பைசா கூட கூடுதலாக வைத்து விற்கக் கூடாது.

ஆனால் அப்படியா நடக்கிறது?

ஒரு லிட்டர் பெட்ரோலின் நியாயமான விலை 20 ரூபாய்க்கும் கீழ்தான். ஆனால் மாநில அரசுகளின் வரி, சுங்கத் தீர்வை, கல்வி வரி, போக்குவரத்து வரி என எல்லாமாகச் சேர்த்து ரூ.55 வரை பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசுகளின் வேலை வெறும் வரிவிதிப்புதான் என்றால், அதற்குப் பெயர் நிர்வாகம் அல்ல... வெறும் தண்டல் வசூல்தான்!

மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.20 என விலை நிர்ணயம் செய்தால், அதை இன்னும் ஒரு மடங்கு அதிக விலைக்கு விற்கக் காரணமாக இருப்பவை மாநில அரசுகள்.

இன்றைய பெட்ரோல் விலையில் மத்திய அரசு வைத்திருக்கும் விலை ரூ. 19தான். மீதி 36 ரூபாய் வரி! இந்த வரியில் கணிசமான பகுதி மாநில அரசுகள் விதிப்பது. விற்பனை வரி, வாகன வரி, உள்நுழைவு வரி... இப்படி எல்லா வரிகளும் மாநில அரசுகளைச் சேர்ந்தவைதான்.

ஒவ்வொரு முறையும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும் போதும் குறைந்தபட்சம் 2 மணி நேரம் கூடப் பொறுத்திருக்க முடியாமல் விலை ஏற்றத்தை அமலுக்குக் கொண்டுவரும் இந்த அரசுகள் (முன்தேதியிட்டு ஏத்த முடியுமா என்று ), விலைக் குறைப்பின் போதுமட்டும் சண்டித்தனம் செய்வதற்குப் பெயர்தான் மக்கள் நலம் காத்தலா?

முன்பு மானியம் வழங்கப்பட்டது, மக்களுக்கு சலுகை விலையில் பெட்ரோல், மண்ணெண்ணெய் கொடுத்தோம். இனி அப்படித் தரமுடியாது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறிவிட்டன. அப்படியே வைத்துக் கொண்டாலும் இரண்டு மாதங்களுக்கு முன்பே பெட்ரோலியப் பொருட்கள்- சமையல் எரிவாயு விலையை அந்த அரசு கணிசமாகக் குறைத்திருக்க வேண்டும். ஆனால்... இந்த இரு மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து வருகின்றன என்பதே உண்மை! இதை ஒப்புக் கொண்டிருப்பவர் பெட்ரோலியத்துறை அமைச்சர் தியோரா அல்ல.. ‘நமது பிரதமர்’ என பெருமைப்பட்டுக் கொள்கிறோமே.. அந்த மன்மோகன் சிங்!!

அவர் கணக்கைப் பாருங்கள்...

‘பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு இப்போது 4.90 காசுகள் லாபம் வருவது உண்மையே. ஆனால் டீஸல் விற்பனையில் 69 காசுகள் நஷ்டம் வருகிறது. இதைச் சரிகட்ட வேண்டும்!’

69 பைசா நஷ்டத்தைச் சரிகட்ட 4.90 காசு லாபம் வேண்டுமாம் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு. இது எந்த வகைக் கணக்கு!

கவனிக்க: நிர்வாகச் செலவுகள், உள் கட்டமைப்புச் செலவுகள், வரி, வட்டி, தண்டச் சம்பளம் என எல்லாக் கருமத்தையும் கழித்துக் கொண்ட பிறகுதான் இவர்கள் லாபத்தைக் கணக்கிடுகிறார்கள்!

தொடரட்டும் இந்த களவாணித்தனம்!

-ஷங்கர்

Saturday, November 22, 2008

வீடு வாங்கலியோ வீடு!

வீடு வாங்கி கடனில் சாவதை விட, வாடகைக் கொடுத்துக் கொண்டே நிம்மதியாகக் காலத்தைத் தள்ளலாம், நிலைமை சரியாகும்வரை!’ என்ற எண்ணம் கிட்டத்தட்ட அனைத்து நடுத்தர மக்களுக்குமே வந்துவிட்டது.

தமிழகம் மற்றும் தலைநகர் சென்னையில் ரியல் எஸ்டேட் எப்படி உச்சாணிக் கொம்புக்குப் போனது?

சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவாக இருந்தாலும் பரவாயில்லை. நமக்கென்று ஒரு வீடு, கடன் வாங்கியாவது வாங்கி வைத்துவிடலாம் என்று நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு பக்கம் கடன் தொகையோடு அலைய, ஐடி நிறுவனங்களில் அள்ளித் தந்த சம்பளத்தை என்ன செய்வது என்று திக்குமுக்காடிப்போய் சின்னப் பசங்களெல்லாம், ஃபிளாட், தனி வீடு என்று தேடித் தேடி, ரியல் எஸ்டேட் முதலைகள் கேட்ட பணத்தைக் கொட்ட, 50 ஆயிரம் கூட பெறாத ஒரு மனைக்கு 50 லட்சம் வரை விலை ஏற்றிவிட்டார்கள்.

இந்தப் போக்கை நிலையென நம்பிய பல நிறுவனங்களின் பார்வை ரியல் எஸ்டேட் துறை மீதே அழுத்தமாக விழுந்தது.

சென்னையில் தொற்றிய இந்த ‘விஷ ஜூரம்’ ஐடி நகரங்கள் என புதிய அந்தஸ்து பெற்ற அத்தனை நகரங்களிலும் தொற்றிக் கொள்ள, ஆகாசத்தைத் தொட்டது வீடுகள் மற்றும் மனைகளின் விலை. வங்கிகள் திருவிழாக் கொண்டாட்டத்துடன் கடன் கொடுத்து மகிழ்ந்தன.
ஆனால் அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறை மற்றும் அதை நம்பியிருந்த வங்கிகள் வீழ்ந்த கதை அம்பலமானதும் விழி பிதுங்கிப் போயின, அவர்களைப் பார்த்து காப்பியடித்த இந்திய நிறுவனங்களும் வங்கிகளும்.

வீட்டுக் கடனுக்கு வட்டி உயர்வு, புதிய கடன் தருவதில் சுணக்கம் என பல நடவடிக்கைகளில் இறங்க, ரூ.20 லட்சம் வங்கிக் கடன் பெற்ற சொந்த வீடு வாங்கியவர்கள் வங்கிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் இப்படி கடன் வாங்கியவர்களின் வேலையும் கேள்விக்குறியாகிவிட்டது. பல ஐடி நிறுவனங்களில் தொடர் ஆட்குறைப்புகள். வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூரில் ஒரே நாளில் 300 பேர் வரை ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதில் ஆடிப்போயுள்ளனர், அவர்களை நம்பி புதுப்புது ஃபிளாட்களைக் கட்டிய பில்டர்கள்.

இந்த நிலை தொடர்ந்தால், டெட்ராய்ட்டில் கடனுக்கு வாங்கிய வீடுகளை அம்போவென விட்டுவிட்டு மக்கள் ஓட்டம் பிடித்த நிலைதான் இங்கும்.

அமெரிக்கா, பிரிட்டனில் இந்த வீழ்ச்சியை எதிர்பார்த்து அதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர் மக்கள். அப்படியும் கூட அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கடன் வாங்குவதிலும், கொடுப்பதிலும் அவர்களைப் பார்த்துக் காப்பியடித்த நம்மவர்களோ, இந்த வீழ்ச்சியை எதிர்பார்க்கவே இல்லை.

இன்னும் ஓரிரு மாதங்கள்தான்... மீண்டும் பழைய விலைக்கே போகப்போகிறது வீட்டு மனைகளின் விலை என்கிறார்கள், அரசு வங்கிகளின் அதிகாரிகள்.

இதற்குக் கட்டியம் கூறுவதுபோல, இப்போது செய்தித்தாள்களில் கூவிக்கூவி அழைக்கிறார்கள் மலிவு விலையில் வீட்டு மனை வாங்கிக் கொள்ள.

ரூ.1 லட்சம் என்று விற்பனை செய்த இடத்தை இப்போது ரூ.50 சதவிகித தள்ளுபடி விலையில் தருவதாக பக்கம் பக்கமாக விளம்பரம் தர ஆரம்பித்திருக்கிறார்கள்.
வேளச்சேரி, மடிப்பாக்கம், ஊரப்பாக்கம், மறைமலைநகர் போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பல வீடுகள் மாதக்கணக்கில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

வாங்க.... வாங்க!!

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களான டிஎல்எப், யுனிடெக், பர்ஸ்வந்த், ஓமெக்ஸ் உட்பட 4,000 நிறுவனங்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் மனை அல்லது வீட்டின் விலையில் குறைந்தது 15 சதவிகிதம் வரைக் கட்டாயம் குறைக்க வேண்டும் என்றும், அதிகபட்சமாக, அவரவர் வசதி மற்றும் இடத்தின் தன்மையைப் பொருத்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், முதலீடு செய்யப்பட்டு விற்காமல் இருந்த மனை, வீடுகளை விற்க பரிசுகளை அளிக்கும் திட்டத்தை டெல்லி, மும்பை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. விலை உயர்ந்த பிளாட்டை முன்பதிவு செய்வோருக்கு கார், லேப்டாப், பிளாஸ்மா டிவி எல்லாம் கூடத் தருவதாக தமுக்கடித்து வருகின்றனர்.

ஒரு சொகுசு வீடு வாங்கினால் ஒரு படுக்கையறை வீடு இலவசம் என்று கூட இந்த வாரம் ஒரு முன்னணி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் சில பில்டர்கள், தங்கள் லாபத்தைக் குறைத்துக் கொண்டு வீடு, மனை விலையை சதுர அடிக்கு 10 முதல் 25 சதவீதம் வரை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

ஆனாலும் சிக்கல் தீர்வதாகத் தெரியவில்லை. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்தப் போக்குதான் நீடிக்கும் என வங்கிகள் கணித்துள்ளதால், மனைகளுக்கு கடன் தரும் திட்டத்தை அறிவிக்கப்படாமல் நிறுத்தியுள்ளன பல வங்கிகள்.

- ஷங்கர்

Wednesday, November 19, 2008

சமாளிப்பான் சாமானியன்; பாவம் நம்ம முதலாளிகள்!


ஒரு காரில் பயணிப்பதை விட விமானத்தில் பயணிப்பதே இன்றைக்கு மலிவானது. அந்த அளவு விமானங்களுக்குப் பயன்படுத்தும் எரிபொருளின் விலை குறைந்துவிட்டது இப்போது. ஆனால் அதன் பலன்கள் மக்களைப் போய்ச் சேர்கிறதா என்பதுதான் இன்றைய கேள்வி.

சமீபத்தில் கிடுகிடு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது கச்சா எண்ணெய் விலை. ஆனால் விலை ஏறும்போது கேட்ட கூக் குரல்களை இன்றைக்குக் காணோம். காரணம் முன்பு விட்டதைப் பிடிக்க, இப்போது ‘கமுக்கமாக’ லாபம் பார்த்துக் கொண்டிருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சரே பகிரங்கமாக அறிவித்துள்ளார் (இந்த பாலிடிக்ஸை விவரமாக பின்னர் பார்ப்போம்...).

உதாரணத்துக்கு, ஒரு லிட்டர் விமான பெட்ரோல் (ATF) விலை ரூ.40.69 காசுதான். ஆனால் சாதாரண பெட்ரோலின் விலை 55 ரூபாய்க்கும் அதிகம் (மாநிலங்களில் விதிக்கப்படும் வரிகளைப் பொறுத்து...)
ஆனால் விமானக் கட்டணங்கள் மட்டும் முன்பைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. எண்ணெய் விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி உயர்த்தப்பட்ட விமானக் கட்டணத்தை குறைக்கும் ஐடியாவே எந்த தனியார் ஏர்வேஸூக்கு இல்லை போலிருக்கிறது.

இந்தப் போக்கைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், தனியார் விமான நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளில் மட்டுமே பெட்ரோலியம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகங்கள் செயல்படுவதாக பெட்ரோலியத் துறையின் முன்னாள் அமைச்சர் ராம் நாயக் குற்றம் சாட்டியுள்ளதை வழக்கமான புகாராகத் தள்ளிவிட முடியாது.

ஒரு பக்கம் விமான நிறுவனங்கள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார் மத்திய நிதி அமைச்சர். ஆனால் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரோ தனியார் விமான நிறுவனங்களுக்குப் பரிந்து கொண்டு வருகிறார். ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் அரசு என பகிரங்கமாகப் பேசி வருகிறார் பிரபுல் பட்டேல்.

இன்னொரு பக்கம் ‘நஷ்டத்தில் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றன பெட்ரோல் நிறுவனங்கள்!’ என உருக்கமாகப் பேசும் முரளி தியோராவும் கூட, விமான எரிபொருள்களுக்கு மட்டும் தாராளமான விலைக் குறைப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார்.

இதே சலுகைகள் பயணிகளுக்கும் கிடைக்குமா... விமான எரிபொருளுக்கு கிடைத்த வரிச் சலுகைகள், தீர்வை விலக்குகள் சாமானியர்கள் பயன்படுத்தும் சாதா பெட்ரோலுக்கும் கிடைக்குமா?

“நிச்சயம் கிடைக்காது. இந்த அரசு ஏழைகளுக்காக அமைந்தது அல்ல. இவர்களுக்கு மக்கள் நலம் மட்டுமே முக்கியம் என்பது உண்மையானால், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மக்களை அழுத்தும் வரிச்சுமையைக் குறைக்கப் பயன்படுத்தலாம். ஆனால் இவர்கள் செய்ய மாட்டார்கள். அதற்கு பெட்ரோல் விலையை பிடிவாதமாக குறைக்க மறுப்பதே ஒரு உதராணம்...” என்கிறார் ராம் நாயக்.

இவர்கள் மட்டும் என்னவாம்? என்கிறீர்களா... இவர்கள் அரசியலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே மறப்போம், எப்போதும் விலகாத விலைச் சுமையை!!

-ஷங்கர், தட்ஸ்தமிழ்

உறவுகளின் துரோகம்: முதியோர் இல்லத்தில் ஒரு மூத்த எழுத்தாளர்!

1973-ம் ஆண்டு சாஹித்ய அகாதமி விருது பெற்ற மாபெரும் எழுத்தாளர் அந்தப் பெண்மணி. ஆனால் இன்று ஆதரவுக்கு ஆளின்றி ஒரு முதியோர் இல்லத்தில் தன் மிச்ச நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்.

அவர்... ராஜம் கிருஷணன். தமிழின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இடதுசாரி சிந்தனைகளுடன், அதே நேரம் மக்களின் யதார்த்த வாழ்க்கையை முற்போக்கான 50-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் நூறுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகளைத் தமிழுக்குத் தந்தவர்.

1950-லேயே புகழ்பெற்ற நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூனின் சர்வதேச விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும்.

உப்பள மக்களின் வாழ்க்கையின் அடிப்படையில் இவர் எழுதிய வேருக்கு நீர்தான் இவருக்கு சாஹித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது. இவரது மண்ணகத்துப் பூந்துளிகளையும், குறிஞ்சித் தேனையும், கரிப்பு மணிகளையும் தமிழறிந்த எந்த வாசகரும் மறந்திருக்க முடியாது.

இந்தளவு புகழின் உச்சியிலிருந்த ஒரு மிகப் பிரபல எழுத்தாளருக்கு ஏனிந்த பாதுகாப்பற்ற நிலை?
திருச்சி மாவட்டம் முசிறியில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன்.  2002-ம் ஆண்டு தன் கணவர் கிருஷ்ணனை இழந்தார். பிள்ளைகள் கிடையாது. அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிடமிருந்த பணத்தையும், சொத்துக்களையும் விட்டு வைத்தாராம். ஆனால் அவர்களோ இவரை ஏமாற்றிவிட்டு மொத்தமாக ஏப்பம் விட்டுவிட, 83 வயதில் நடுத்தெருவில் நிர்க்கதியாய் நிற்க, சில நண்பர்களும் அவரது ஒரு சகோதரரும் கை கொடுத்துள்ளனர். அவர்கள்தான் ராஜம் கிருஷ்ணனை விச்ராந்தி என்ற இந்த முதியார் இல்லத்தில் சேர்த்திருக்கிறார்கள்.

ஆனால் யாரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுவதை இந்த நிலையிலும் விரும்பாத ராஜம் கிருஷ்ணன், இப்போதும் அதே உற்சாகத்துடன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார். இவரது கடைசி புத்தகம் ‘உயிர் விளையும் நிலங்கள்’. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதை பெண்கள் எதிர்நோக்கும் விதங்கள் குறித்து 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளோடு கூடிய இந்தப் புத்தகம் பெண்களுக்கு புதிய விழிப்பை உண்டாக்கும் முயற்சி.

இப்போதும் கட்டுரைகள் மற்றும் கதைகளை எழுதிக் கொண்டிருக்கும் ராஜம், தமிழ் இலக்கிய உலகப் போக்கு குறித்த தனது அதிருப்தியை இப்படி வெளிப்படுத்துகிறார்:

உப்பளங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையைப் பதிவு செய்ய தூத்துக்குடி உப்பளத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தேன். காரணம் எதையும் மேம்போக்காக்கப் பதிவதில் எனக்கு விருப்பமில்லை. மக்களின் வாழ்க்கையை அதன் வலிகளோடும், இயல்புகளோடும் பதிவு செய்ய வேண்டும்.

இன்றைக்கு பெரும்பாலான எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் கதையின் களத்தைப் பற்றிய அறிவு கூட இல்லாமல்தான் எழுதுகிறார்கள். எல்லாம் வறட்டுக் கற்பனை. இவர்களுக்கு சினிமா, சினிமா பாடல்கள்தான் வாழ்க்கை, இலக்கியம் என்றாகிவிட்டது. யாருக்கும் மக்களைப் பற்றிய அக்கறையோ, குறைந்தபட்சம் அவர்களின் உலகத்தை எட்டிப் பார்க்கும் ஆவலோ கூட கிடையாது. எழுத்து பெரிய வியாரமாகிவிட்டதன் விளைவாகக் கூட இது இருக்கலாம்...’ என்கிறார் ராஜம் கிருஷ்ணன்.

நெஞ்சைச் சுடும் நிஜம்!

-ஷங்கர்