Sunday, November 23, 2008

தொடரட்டும் இந்த களவாணித்தனம்!

அரசாங்கம் என்பது என்ன? அப்படி ஒரு அமைப்பு நமக்குத் தேவையா?

மக்கள் குழுவை முறைப்படுத்த, அவர்களின் தேவைகளைக் கவனிக்க, மக்களால் உருவாக்கப்படுகிற, அங்கீகரிக்கப்படுகிற அமைப்புதான் அரசாங்கம்.

தனித்தனி மனிதர்களின் தான்தோன்றித்தனங்கள் சமூகச் சிதைவை ஏற்படுத்தும் தருணங்களில் இப்படியொரு அமைப்பின் இருத்தல் அவசியமாகிறது.

இவற்றையெல்லாம்விட முக்கியமானது இந்த அரசாங்கம் எப்படிப்பட்ட தன்மையதாக இருந்தாலும், நேர்மையாக இருப்பது முக்கியம்.

மக்களின் வெறுப்புக்குரியவனாக தன்னை ஆக்கிக் கொள்ளும் மன்னனுக்கு கடைசி புகலிடம் தூக்கு மேடைதான்!

நேர்மையில்லாத அரசுகள் தூக்கியெறியப்பட வேண்டியவையே!

-அரசியல் இலக்கணம் வகுத்த நிக்கோலோ மாக்கியவல்லி (1469-1527) இப்படிக் கூறுகிறார்!

இன்றைய ஐக்கிய முற்போக்கு (?!) கூட்டணி அரசின் நேர்மையைப் பார்க்கிற பொழுது, மாக்கியவல்லியின் கடைசி வாக்கியம் மனதுக்குள் நிழலாடுகிறது.

எத்தனையோ விஷயங்களில் இந்திய அரசுகளின் நேர்மை சந்தேகத்துக்கிடமின்றி பொய்யாக்கப்பட்டுள்ளது!

பொதுவாக ஒரு குற்றவாளிதான் சட்டத்தின் ஓட்டைகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்குவான்.

ஆனால் இந்தியாவின் மத்திய மாநில அரசுகள் இப்போது ஒரு குற்றவாளியின் வேலையைத்தான் முழுநேரமாகச் செய்துகொண்டிருக்கின்றன. அதிகபட்ச நேர்மையின்மைக்கு ஒரு உதாரணமாகவே இந்த அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

பொத்தாம் பொதுவாக இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
இதோ ஒரு உதாரணம்...

பெட்ரோல் டீஸல் விலைக் குறைப்பில் அரசுகள் காட்டி வரும் அதீத தயக்கம்.
இதைவிட அயோக்கியத்தனம் கிடையாது என்னும் அளவுக்கு, ஒரு சாதாரண வியாபாரியைவிட மோசமான நேர்மைக் குறைவுடன் அரசுகளும், அரசு சார் நிறுவனங்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை விஷயத்தில்.

சர்வதேச எண்ணெய் உற்பத்தி நாடுகள் அல்லது அவற்றின் பிரதான எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோலிய சந்தையை மையப்படுத்தி தாங்கள் நடத்தி வந்த ஊக வாணிபம் படுத்துவிட்டதால் வேறு வழியின்றி விலைச் சரிவை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

“கச்சா எண்ணெயின் விலை 48 டாலர்கள்தான் வாங்க... வாங்க’ எனக் கூவிக்கூவி விற்கிறார்கள் பெரும்பாலான நாடுகள். இன்னும் சில நாடுகளோ, அடுத்து எப்போது விலை ஏறும் என்ற எதிர்பார்ப்பில் கச்சா எண்ணெய்யை இருப்பில் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இன்றைய விலை நிலையில் இந்திய அரசு நியாயமாக பெட்ரோல் விற்றால் ஒரு லிட்டர் ரூ. 25க்கு மேல் ஒரு நயா பைசா கூட கூடுதலாக வைத்து விற்கக் கூடாது.

ஆனால் அப்படியா நடக்கிறது?

ஒரு லிட்டர் பெட்ரோலின் நியாயமான விலை 20 ரூபாய்க்கும் கீழ்தான். ஆனால் மாநில அரசுகளின் வரி, சுங்கத் தீர்வை, கல்வி வரி, போக்குவரத்து வரி என எல்லாமாகச் சேர்த்து ரூ.55 வரை பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசுகளின் வேலை வெறும் வரிவிதிப்புதான் என்றால், அதற்குப் பெயர் நிர்வாகம் அல்ல... வெறும் தண்டல் வசூல்தான்!

மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.20 என விலை நிர்ணயம் செய்தால், அதை இன்னும் ஒரு மடங்கு அதிக விலைக்கு விற்கக் காரணமாக இருப்பவை மாநில அரசுகள்.

இன்றைய பெட்ரோல் விலையில் மத்திய அரசு வைத்திருக்கும் விலை ரூ. 19தான். மீதி 36 ரூபாய் வரி! இந்த வரியில் கணிசமான பகுதி மாநில அரசுகள் விதிப்பது. விற்பனை வரி, வாகன வரி, உள்நுழைவு வரி... இப்படி எல்லா வரிகளும் மாநில அரசுகளைச் சேர்ந்தவைதான்.

ஒவ்வொரு முறையும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும் போதும் குறைந்தபட்சம் 2 மணி நேரம் கூடப் பொறுத்திருக்க முடியாமல் விலை ஏற்றத்தை அமலுக்குக் கொண்டுவரும் இந்த அரசுகள் (முன்தேதியிட்டு ஏத்த முடியுமா என்று ), விலைக் குறைப்பின் போதுமட்டும் சண்டித்தனம் செய்வதற்குப் பெயர்தான் மக்கள் நலம் காத்தலா?

முன்பு மானியம் வழங்கப்பட்டது, மக்களுக்கு சலுகை விலையில் பெட்ரோல், மண்ணெண்ணெய் கொடுத்தோம். இனி அப்படித் தரமுடியாது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறிவிட்டன. அப்படியே வைத்துக் கொண்டாலும் இரண்டு மாதங்களுக்கு முன்பே பெட்ரோலியப் பொருட்கள்- சமையல் எரிவாயு விலையை அந்த அரசு கணிசமாகக் குறைத்திருக்க வேண்டும். ஆனால்... இந்த இரு மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து வருகின்றன என்பதே உண்மை! இதை ஒப்புக் கொண்டிருப்பவர் பெட்ரோலியத்துறை அமைச்சர் தியோரா அல்ல.. ‘நமது பிரதமர்’ என பெருமைப்பட்டுக் கொள்கிறோமே.. அந்த மன்மோகன் சிங்!!

அவர் கணக்கைப் பாருங்கள்...

‘பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு இப்போது 4.90 காசுகள் லாபம் வருவது உண்மையே. ஆனால் டீஸல் விற்பனையில் 69 காசுகள் நஷ்டம் வருகிறது. இதைச் சரிகட்ட வேண்டும்!’

69 பைசா நஷ்டத்தைச் சரிகட்ட 4.90 காசு லாபம் வேண்டுமாம் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு. இது எந்த வகைக் கணக்கு!

கவனிக்க: நிர்வாகச் செலவுகள், உள் கட்டமைப்புச் செலவுகள், வரி, வட்டி, தண்டச் சம்பளம் என எல்லாக் கருமத்தையும் கழித்துக் கொண்ட பிறகுதான் இவர்கள் லாபத்தைக் கணக்கிடுகிறார்கள்!

தொடரட்டும் இந்த களவாணித்தனம்!

-ஷங்கர்

2 comments:

ttpian said...

சொந்தமாய் யோசிக்காதவரை, 21 சீட்டு என்ன? 40 சீட்டும் கிடைக்கும்.....
எப்போது தமிழனுக்கு டெல்லி மதிப்பு கொடுக்கவில்லையோ...இந்த நாடு இருந்தால் என்னா?நாசமாய் போனால் என்ன?

ttpian said...

இனிமேல் கொலைஜனுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை!
எத்தனை முதுகுமார் உயிர் தியாகம் செய்தாலும்,பொயசு தோட்டது மாமியும்,கொலைஜனும்,தமிழன் பினத்தில் தான் பிழைப்பு நடத்துவார்கள்