Saturday, November 22, 2008

வீடு வாங்கலியோ வீடு!

வீடு வாங்கி கடனில் சாவதை விட, வாடகைக் கொடுத்துக் கொண்டே நிம்மதியாகக் காலத்தைத் தள்ளலாம், நிலைமை சரியாகும்வரை!’ என்ற எண்ணம் கிட்டத்தட்ட அனைத்து நடுத்தர மக்களுக்குமே வந்துவிட்டது.

தமிழகம் மற்றும் தலைநகர் சென்னையில் ரியல் எஸ்டேட் எப்படி உச்சாணிக் கொம்புக்குப் போனது?

சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவாக இருந்தாலும் பரவாயில்லை. நமக்கென்று ஒரு வீடு, கடன் வாங்கியாவது வாங்கி வைத்துவிடலாம் என்று நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு பக்கம் கடன் தொகையோடு அலைய, ஐடி நிறுவனங்களில் அள்ளித் தந்த சம்பளத்தை என்ன செய்வது என்று திக்குமுக்காடிப்போய் சின்னப் பசங்களெல்லாம், ஃபிளாட், தனி வீடு என்று தேடித் தேடி, ரியல் எஸ்டேட் முதலைகள் கேட்ட பணத்தைக் கொட்ட, 50 ஆயிரம் கூட பெறாத ஒரு மனைக்கு 50 லட்சம் வரை விலை ஏற்றிவிட்டார்கள்.

இந்தப் போக்கை நிலையென நம்பிய பல நிறுவனங்களின் பார்வை ரியல் எஸ்டேட் துறை மீதே அழுத்தமாக விழுந்தது.

சென்னையில் தொற்றிய இந்த ‘விஷ ஜூரம்’ ஐடி நகரங்கள் என புதிய அந்தஸ்து பெற்ற அத்தனை நகரங்களிலும் தொற்றிக் கொள்ள, ஆகாசத்தைத் தொட்டது வீடுகள் மற்றும் மனைகளின் விலை. வங்கிகள் திருவிழாக் கொண்டாட்டத்துடன் கடன் கொடுத்து மகிழ்ந்தன.
ஆனால் அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறை மற்றும் அதை நம்பியிருந்த வங்கிகள் வீழ்ந்த கதை அம்பலமானதும் விழி பிதுங்கிப் போயின, அவர்களைப் பார்த்து காப்பியடித்த இந்திய நிறுவனங்களும் வங்கிகளும்.

வீட்டுக் கடனுக்கு வட்டி உயர்வு, புதிய கடன் தருவதில் சுணக்கம் என பல நடவடிக்கைகளில் இறங்க, ரூ.20 லட்சம் வங்கிக் கடன் பெற்ற சொந்த வீடு வாங்கியவர்கள் வங்கிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் இப்படி கடன் வாங்கியவர்களின் வேலையும் கேள்விக்குறியாகிவிட்டது. பல ஐடி நிறுவனங்களில் தொடர் ஆட்குறைப்புகள். வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூரில் ஒரே நாளில் 300 பேர் வரை ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதில் ஆடிப்போயுள்ளனர், அவர்களை நம்பி புதுப்புது ஃபிளாட்களைக் கட்டிய பில்டர்கள்.

இந்த நிலை தொடர்ந்தால், டெட்ராய்ட்டில் கடனுக்கு வாங்கிய வீடுகளை அம்போவென விட்டுவிட்டு மக்கள் ஓட்டம் பிடித்த நிலைதான் இங்கும்.

அமெரிக்கா, பிரிட்டனில் இந்த வீழ்ச்சியை எதிர்பார்த்து அதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர் மக்கள். அப்படியும் கூட அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கடன் வாங்குவதிலும், கொடுப்பதிலும் அவர்களைப் பார்த்துக் காப்பியடித்த நம்மவர்களோ, இந்த வீழ்ச்சியை எதிர்பார்க்கவே இல்லை.

இன்னும் ஓரிரு மாதங்கள்தான்... மீண்டும் பழைய விலைக்கே போகப்போகிறது வீட்டு மனைகளின் விலை என்கிறார்கள், அரசு வங்கிகளின் அதிகாரிகள்.

இதற்குக் கட்டியம் கூறுவதுபோல, இப்போது செய்தித்தாள்களில் கூவிக்கூவி அழைக்கிறார்கள் மலிவு விலையில் வீட்டு மனை வாங்கிக் கொள்ள.

ரூ.1 லட்சம் என்று விற்பனை செய்த இடத்தை இப்போது ரூ.50 சதவிகித தள்ளுபடி விலையில் தருவதாக பக்கம் பக்கமாக விளம்பரம் தர ஆரம்பித்திருக்கிறார்கள்.
வேளச்சேரி, மடிப்பாக்கம், ஊரப்பாக்கம், மறைமலைநகர் போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பல வீடுகள் மாதக்கணக்கில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

வாங்க.... வாங்க!!

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களான டிஎல்எப், யுனிடெக், பர்ஸ்வந்த், ஓமெக்ஸ் உட்பட 4,000 நிறுவனங்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் மனை அல்லது வீட்டின் விலையில் குறைந்தது 15 சதவிகிதம் வரைக் கட்டாயம் குறைக்க வேண்டும் என்றும், அதிகபட்சமாக, அவரவர் வசதி மற்றும் இடத்தின் தன்மையைப் பொருத்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், முதலீடு செய்யப்பட்டு விற்காமல் இருந்த மனை, வீடுகளை விற்க பரிசுகளை அளிக்கும் திட்டத்தை டெல்லி, மும்பை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. விலை உயர்ந்த பிளாட்டை முன்பதிவு செய்வோருக்கு கார், லேப்டாப், பிளாஸ்மா டிவி எல்லாம் கூடத் தருவதாக தமுக்கடித்து வருகின்றனர்.

ஒரு சொகுசு வீடு வாங்கினால் ஒரு படுக்கையறை வீடு இலவசம் என்று கூட இந்த வாரம் ஒரு முன்னணி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் சில பில்டர்கள், தங்கள் லாபத்தைக் குறைத்துக் கொண்டு வீடு, மனை விலையை சதுர அடிக்கு 10 முதல் 25 சதவீதம் வரை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

ஆனாலும் சிக்கல் தீர்வதாகத் தெரியவில்லை. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்தப் போக்குதான் நீடிக்கும் என வங்கிகள் கணித்துள்ளதால், மனைகளுக்கு கடன் தரும் திட்டத்தை அறிவிக்கப்படாமல் நிறுத்தியுள்ளன பல வங்கிகள்.

- ஷங்கர்

3 comments:

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

வணக்கம். உன்மைப்பதிவு இது.இப்போது உலகம் முழுக்கப் பொருந்தும் பதிவு.தொடரட்டும் உமது
பணி.
தமிழ்சித்தன்

Unknown said...

Very good article

Vaanathin Keezhe... said...

கருத்துக்கு நன்றி நண்பர்களே...